இயக்குநர் மதன் இயக்கத்தில் அபிஷன் ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா நடித்த ‘வித் லவ்’ திரைப்படத்தின் நன்றி தெரிவிப்பு விழா சென்னை நகரில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் படக்குழுவினர் மற்றும் தொடர்புடைய பலரும் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வில் கதாநாயகி அனஸ்வரா பேசுகையில், “சில தினங்களுக்கு முன்பு ரஜினி சார் அவர்களை நேரில் சந்தித்து, முழு படக்குழுவும் சேர்ந்து பேசும் வாய்ப்பு கிடைத்தது. அது என் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு தருணம். கடந்த வாரம் பல ஊர்களில் உள்ள திரையரங்குகளுக்கு சென்று ரசிகர்களுடன் சேர்ந்து படம் பார்த்தோம். அப்போது என் கதாபாத்திரத்தின் பெயரை கூறி பலரும் உற்சாகம் காட்டினர். அது எனக்கு மறக்க முடியாத அனுபவமாக இருந்தது என்று கூறினார்.
மேலும், இப்படத்தின் தயாரிப்பாளரும் ரஜினிகாந்தின் மகளுமான சவுந்தர்யா பேசுகையில், நாங்கள் முழு டீமாக இணைந்து போயஸ் கார்டன் இல்லத்திற்கு அப்பா, அம்மாவைச் சந்திக்கச் சென்றோம். உள்ளே சென்றவுடன் அவர்கள் இருவரும் என்னை அன்பாக அணைத்துக் கொண்டார்கள். அப்போது நான் அப்பாவிடம் ‘அப்பா, இதுதான் வெற்றியா?’ என்று கேட்டேன். அதற்கு அப்பா சிரித்தார். அந்த சிரிப்பு என் வாழ்க்கையில் என்றும் மறக்க முடியாத ஒன்று என்றார்.
மேலும், 16 முதல் 18 ஆண்டுகளாக சினிமாவில் இருந்தாலும், இந்த டீமும் இந்த குடும்பமும் தான் வெற்றியின் உண்மையான அர்த்தத்தை எனக்கு உணர்த்தியது. இந்தப் படத்தின் இன்னொரு தயாரிப்பாளர் எனக்கு தம்பி போன்றவர். இது என் முதல் வெற்றி சந்திப்பு. இந்த தருணத்தை வழங்கிய என் ‘வித் லவ்’ குடும்பத்துக்கு மனமார்ந்த நன்றி” என்று தெரிவித்துள்ளார்.
