தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்துள்ள நடிகை மம்தா மோகன் தாஸ், தன்னை பாதித்த புற்றுநோய் குறித்து மனம் திறந்து பகிர்ந்துள்ளார். அதாவது எனக்கு 24 வயதில் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. அதன் பின்னர் 27 மற்றும் 28 வயதில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. எனது உடல்நிலையைச் சேர்ந்த ஒரு முக்கிய விஷயத்தை குறித்து யாரும் என்னிடம் தெளிவாக சொல்லவில்லை. அது மருத்துவர்களுக்கு தெரிந்திருந்தாலும், அவர்கள் அதை எனக்குத் தெரிவிக்கவில்லை என்றார்.
மேலும், சிகிச்சைக்குப் பிறகு நான் டாக்டர்களிடம் நேரடியாகக் கேட்டபோது, ‘நீங்கள் எங்களிடம் கேட்கவில்லை’ என்று எளிதாக பதிலளித்தார்கள். எனக்கு எப்படி தெரியும்? அந்த மருத்துவர்கள் அமெரிக்காவில் கல்வி கற்றவர்கள். நான் எல்லா மருத்துவர்களையும் குறை கூறவில்லை. ஆனால் தகவல் பகிர்வு மிக முக்கியம்” என தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து, “அறுவை சிகிச்சைக்குப் பிறகு 30 முதல் 35 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டியிருந்தது.
அந்த நேரத்தில் நான் நர்சுகளிடம், ‘நீங்கள் நோயாளிகளின் அறைக்குள் வரும்போது குறைந்தபட்சம் ஒரு சிறிய புன்னகையாவது காட்டுங்கள். அது நோயாளிகளுக்கு பெரிய மன உறுதியை தரும்’ என்று கூறியிருந்தேன். அந்த காலகட்டத்தில் சிலர் என்னை ஆதரிக்க வந்தார்கள். அவர்கள் என்னை பார்த்து அழவில்லை. மாறாக, என்னை உற்சாகப்படுத்த நகைச்சுவையாக பேசினார்கள்” என நினைவுகூர்ந்தார்.
