நடிகை ரஜிஷா விஜயன் கடந்த எட்டு ஆண்டுகளாக வாட்ஸ்அப் போன்றவற்றின் பயன்பாட்டைத் தவிர்த்து வருவதாக தெரிவித்துள்ளார். மெய்நிகர் உலகத்தின் தொடர்புகளை விட நேரடி மனித உறவுகளுக்கும் சந்திப்புகளுக்கும் தான் அதிக முக்கியத்துவம் அளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
சமீபத்தில் அளித்த நேர்காணலில் தனது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் தொழில்முறை அனுபவங்கள் குறித்து பகிர்ந்துகொண்ட ரஜிஷா, சமூக ஊடகங்களின் தாக்கம் குறித்தும் கருத்து தெரிவித்துள்ளார். “இன்று பலர் கைப்பேசிகளுக்கு அடிமையாகி விட்டனர். நேரத்தின் மதிப்பை நாம் உணராமல் விட்டுவிடுகிறோம். நான் கடந்த எட்டு ஆண்டுகளாக வாட்ஸ்அப்பைப் பயன்படுத்தவில்லை,” என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் நெருங்கியவர்களுடன் நேரடியாக நேரம் செலவிடுவது மிகவும் முக்கியம் என்றும், தொலைபேசியில் பேசுவதற்குப் பதிலாக நேரில் சந்தித்து உரையாடுவது அதிக அர்த்தமுள்ளதாக தாம் நம்புவதாகவும் கூறினார். ரஜிஷா விஜயனின் இந்த கருத்துகள் சமூக வலைதளங்களில் தற்போது பரவலாக பகிரப்பட்டு வருகிறது.
