ஒரு திரைப்படத்தை தயாரிக்க ஆகும் மொத்த செலவை விட பல நேரங்களில் ஹீரோ மற்றும் ஹீரோயின்களின் சம்பளமே அதிகமாக இருப்பது வழக்கமாக உள்ளது. குறிப்பாக, ஒரு படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க கூட முன்னணி நடிகர்கள் கோடிக்கணக்கில் சம்பளம் பெறுவது சாதாரணமாகி விட்டது.
இந்நிலையில், காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாகும் ‘ஓ ரோமியோ’ என்ற இந்தி திரைப்படத்தில் நடிகர் விக்ராந்த் மாஸ்சி மற்றும் நடிகை தமன்னா இருவரும் ஒரு ரூபாய் கூட சம்பளம் பெறாமல் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் விஷால் பரத்வாஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் ஷாகித் கபூர் மற்றும் திருப்தி டிம்ரி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அதேபோல், விக்ராந்த் மாஸ்சி, திஷா பதானி, தமன்னா மற்றும் நானா படேகர் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தில் நடித்த விக்ராந்த் மாஸ்சி மற்றும் தமன்னா, இயக்குநர் விஷால் பரத்வாஜ் மீது கொண்ட மரியாதை காரணமாகவே சம்பளம் பெறாமல் நடித்ததாக கூறப்படுகிறது. தமன்னா இந்தப் படத்திற்காக சுமார் 12 நாட்கள் படப்பிடிப்பில் பங்கேற்றதுடன், அதற்கு முன்பாக நடைபெற்ற ஒத்திகைகளிலும் கலந்துகொண்டார். சமீபகாலமாக ஒரு தனிப்பாடலுக்கு நடனம் ஆடுவதற்கே ரூ.6 கோடி வரை சம்பளம் வாங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
