‘சேது’ திரைப்படத்தில் விக்ரமுடன் இணைந்து நடித்ததன் மூலம் தமிழ்ச் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அபிதா. அதன் பின்னர் பல திரைப்படங்களில் தொடர்ந்து நடித்த அவர், ஒரு கட்டத்தில் திடீரென சினிமாவிலிருந்து விலகினார்.
பின்னர் சின்னத்திரை தொடர்களில் கவனம் செலுத்தி நடித்து வருகிறார். தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘ஊருக்கு ரெண்டு ஊதாரி’ என்ற திரைப்படத்தின் மூலம் மீண்டும் பெரிய திரைக்கு திரும்பியுள்ளார்.
இந்தப் படத்தை முன்னிட்டு சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர் பேசியபோது, ராமராஜன் மற்றும் நளினி தம்பதியர் பிரிவுக்கு தானே காரணம் என்ற செய்தி குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அபிதா, “அந்த காலத்தில் பரவிய இந்த வதந்திகள் என்னை மனதளவில் மிகவும் பாதித்தன. தினமும் அழுதபடி இருந்த நாட்களும் உண்டு. ராமராஜன் என்னைத் திருமணம் செய்யப் போகிறார் என்றெல்லாம் கூறினர். அது உண்மையாக இருந்திருந்தால் அப்போது ஏதாவது நடந்திருக்க வேண்டும். ஆனால் அப்படி எதுவும் நடைபெறவில்லை. காரணம், அந்த தகவல் முழுவதும் பொய்யானது. எனது குடும்பத்தினர் எனக்கு உறுதுணையாக நின்றதால், அந்த மன உளைச்சலிலிருந்து நான் மெதுவாக மீண்டுவந்தேன் என்று தெரிவித்துள்ளார்.
