2017 ஆம் ஆண்டு வெளியான ‘மேயாத மான்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் ரத்னகுமார். அந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இவர் ‘ஆடை’, ‘குலுகுலு’ போன்ற திரைப்படங்களை இயக்கி தனித்துவமான கதையாடலுடன் கவனம் பெற்றார்.
இதனை அடுத்து, இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் ‘ஸ்டோன் பெஞ்ச்’ நிறுவனம் மற்றும் லோகேஷ் கனகராஜின் ‘ஜி-ஸ்குவாட்’ நிறுவனம் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படத்தை ரத்னகுமார் இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் விது, ப்ரீத்தி அஸ்ராணி, மாஸ்டர் மகேந்திரன், அவினாஷ், செனாஷ், பிரேம்குமார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ரத்னகுமார் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் தலைப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. அந்த அறிவிப்பின் படி, இப்படத்திற்கு ‘29’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், ‘29’ திரைப்படத்தின் முழு படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ளதாக படக்குழு சார்பில் ஒரு வீடியோ வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
