தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ரவி மோகனின் 34-வது திரைப்படமாக உருவாகியுள்ள படம் ‘கராத்தே பாபு’. ‘டாடா’ திரைப்படத்தை இயக்கிய கணேஷ் கே.பாபு இந்தப் படத்தை இயக்கியுள்ளார். ஸ்க்ரீன் ஸீன் நிறுவனம் தயாரித்துள்ள இந்த திரைப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார்.
இந்த படத்தில் ரவி மோகன் அரசியல்வாதி மற்றும் கராத்தே மாஸ்டர் என இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். நாயகியாக தவ்தி ஜிவால் நடித்துள்ளார். இதன் மூலம் அவர் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார். இவர் தமிழக டிஜிபி சங்கர் ஜிவாலின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், இந்த திரைப்படத்தில் கே.எஸ்.ரவிக்குமார், விடிவி கணேஷ், சக்தி வாசுதேவன், சுப்ரமணியம் சிவா, கவிதாலயா கிருஷ்ணன், பிரதீப் ஆண்டனி, ராஜ ராணி பாண்டியன், சந்தீப் ராஜ், சிந்துப்ரியா, அஜித் கோஷ், அரவிந்த், கல்கி ராஜா, ஸ்ரீ தன்யா, ஆனந்தி, சாம் ஆண்டர்சன் உள்ளிட்ட மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இந்த நிலையில், ‘கராத்தே பாபு’ படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. டீசரில் அரசியல் பின்னணியுடன் கூடிய அனல்பறக்கும் வசனங்கள் இடம் பெற்றுள்ளன. குறிப்பாக, “நீ தொழிலுக்காக அரசியல் பண்றவன், நான் அரசியலையே தொழிலா பண்றவன்” என்ற வசனம் கவனம் ஈர்த்துள்ளது.
