‘அமரன்’ படத்தைத் தொடர்ந்து தெலுங்கில் நாகசைதன்யாவுடன் ‘தண்டேல்’ திரைப்படத்தில் நடித்த சாய் பல்லவி, அதன்பின்னர் ஹிந்தியில் ‘ஏக் தின்’, ‘ராமாயணா’ போன்ற படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில், கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் 173-வது படத்தை சுந்தர்.சி இயக்குவதாக அறிவிக்கப்பட்ட போது, அந்த படத்தில் சாய் பல்லவி நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின.
பின்னர் கதையில் ஏற்பட்ட சில மாற்றங்கள் மற்றும் பிரச்சினைகளால் சுந்தர்.சி அந்த படத்தில் இருந்து விலகினார். அதன் தொடர்ச்சியாக, ரஜினிகாந்தின் 173-வது படத்தை சிபி சக்கரவர்த்தி இயக்குவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், சுந்தர்.சி இயக்குநராக இருந்த காலகட்டத்திலேயே ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் சாய் பல்லவியுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது. ஆனால் இயக்குநர் மாற்றம் ஏற்பட்ட பிறகு, தற்போது அந்த படத்திற்காக இரண்டு முன்னணி நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த இரு நடிகைகளில் ஒருவராக சாய் பல்லவி இருப்பதாகவும், குடும்ப கதையம்சத்தில் உருவாகும் இந்த படத்தில் அவர் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும் சினிமா வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.
