கன்னட சினிமாவில் அறிமுகமாகி, தற்போது தென்னிந்திய சினிமாவில் மூன்று மொழிகளில் தொடர்ந்து நடித்துவரும் நடிகை ஆஷிகா ரங்கநாத், தன் தனித்துவமான நடிப்பால் கவனம் பெற்றுவருகிறார். தமிழில் ‘பட்டத்து யானை’, ‘மிஸ் யூ’ ஆகிய திரைப்படங்களில் நடித்த அவர், தற்போது நடிகர் கார்த்தி நடிக்கும் ‘சர்தார் 2’ திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இதுகுறித்து அவர் பேசுகையில், தனது தாய்மொழி கன்னடம் என்றும், தெலுங்கு திரைப்படங்களை தொடர்ந்து பார்த்ததன் மூலம் தெலுங்கு மொழியை கற்றுக்கொண்டதாகவும் தெரிவித்தார். தமிழ் மொழி ஓரளவு புரியும் என்றும், அதை கற்றுக்கொள்வது சிரமமாக இருந்தாலும் விரைவில் முழுமையாக கற்றுக்கொள்வேன் என்ற நம்பிக்கையும் அவர் வெளிப்படுத்தினார். பல மொழிகளை கற்றுக்கொள்வது, நடிகை என்ற அடையாளத்தைத் தாண்டி, ஒரு மனிதராக தனக்கு பெரும் பயனை அளித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
மேலும், மொழி அறிவு தனக்குள் மேலும் வலிமையையும், பணியில் அதிக அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டிய ஊக்கத்தையும் உருவாக்கியுள்ளதாக ஆஷிகா ரங்கநாத் குறிப்பிட்டார்.
