சிவகார்த்திகேயன் நடித்த ‘மனம் கொத்தி பறவை’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மலையாள நடிகை ஆத்மியா. அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாத காரணத்தால், தமிழில் அவருக்கு பெரிய வாய்ப்புகள் உடனடியாக அமையவில்லை. இருப்பினும் தொடர்ந்து முயற்சியை கைவிடாமல், ‘போங்கடி நீங்களும் உங்க காதலும்’, ‘காவியன்’, ‘வெள்ளை யானை’ போன்ற படங்களில் நடித்தார். இதைத் தொடர்ந்து 2022ஆம் ஆண்டு வெளியான ‘யூகி’ திரைப்படத்தில் அவர் கடைசியாக நடித்திருந்தார்.
தற்போது நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு ‘காதல் கதை சொல்லவா’ என்ற திரைப்படத்தின் மூலம் மீண்டும் தமிழுக்கு திரும்பி உள்ளார் ஆத்மிகா. இந்த படத்தில் அவர் நடிகர் ஜெயராமின் மனைவி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதில் நகுல் மற்றும் ரித்திகா சென் மற்றொரு ஜோடியாக நடித்துள்ளனர். நடிகர் விஜய் சேதுபதி சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். ஒளிப்பதிவை ஷாஜன் களம் மேற்கொண்டுள்ளார். ஜெயச்சந்திரன் மற்றும் சரத் இசையமைத்துள்ளனர். இயக்குநர் சனில் களம் இந்த படத்தை இயக்கியுள்ளார். பேப்பர் மின்ட் நிறுவனத்தின் சார்பில் ஆகாஷா அமையா இந்த படத்தை தயாரித்துள்ளார். இந்த படம் பிப்ரவரி 6ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
படம் குறித்து இயக்குநர் பேசுகையில், “மூன்று கோணங்களில் நகரும் வித்தியாசமான காதல் கதையாக இந்த படம் உருவாகியுள்ளது. விஜய் சேதுபதி இதுவரை நடித்திராத ஒரு புதிய பரிணாமத்தில் இந்த படத்தில் தோன்றுகிறார். மனித உணர்வுகள், நம்பிக்கை, காதல், தியாகம் மற்றும் மனிதநேயத்தின் வலிமையை வெளிப்படுத்தும் வகையில், மனதை நெகிழ வைக்கும் திரைப்படமாக இது இருக்கும்” என்று தெரிவித்தார்.
