நடிகர் அஜித் குமார் நடித்த திரைப்படங்களில் அவரது ரசிகர்களால் அதிகமாக கொண்டாடப்பட்ட படமாக ‘மங்காத்தா’ திகழ்கிறது. இந்தப் படம் இன்று (ஜனவரி 23) 400-க்கும் மேற்பட்ட திரைகளில் பிரம்மாண்டமான முறையில் மறுவெளியீடாகியுள்ளது.
இப்படத்தில் அஜித்துடன் நடிகர் அர்ஜுன், திரிஷா, மகத், பிரேம்ஜி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். தமிழகம் முழுவதும் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு மூலமாக மட்டும் 1 லட்சத்திற்கும் அதிகமான டிக்கெட்கள் விற்பனையாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படத்தை மீண்டும் திரையரங்கில் பார்ப்பதற்காக இயக்குநர் வெங்கட் பிரபு சென்னையில் உள்ள ஒரு திரையரங்கிற்கு நேரில் வந்து ரசிகர்களுடன் இணைந்து படத்தை ரசித்துள்ளார்.
ரசிகர்களுடன் படம் பார்த்த பின்னர் அவர் மிகுந்த மகிழ்ச்சியுடன் பேசினார். அப்போது அங்கிருந்த அஜித் ரசிகர்கள், ‘மங்காத்தா’ படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் எனக் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த வெங்கட் பிரபு, “நான் எப்படி சொல்ல வேண்டும் என்று தெரியவில்லை. தல சொன்னால் எனக்கு ஓகே. மங்காத்தா முதல் பாகமும் அவர்தான் சொன்னார். அடுத்த பாகம் குறித்தும் அவர்தான் சொல்ல வேண்டும் என்று தெரிவித்தார்.
