தமிழில் ‘சித்திரம் பேசுதடி’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் மலையாள நடிகை பாவனா. அதன் பின்னர் ‘தீபாவளி’, ‘ஜெயம் கொண்டான்’, ‘அசல்’ உள்ளிட்ட பல தமிழ் திரைப்படங்களில் நடித்த அவர், தமிழ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றார். இதனுடன் மலையாள சினிமாவிலும் தொடர்ந்து நடித்து வந்த பாவனா, தன் நடிப்புத் திறமையால் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.
தற்போது, மலையாளத்தில் பாவனா நடித்துள்ள ‘அனோமி’ திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக தயாராகி வருகிறது. இந்த நிலையில், நடிகை பாவனா வரவிருக்கும் கேரள சட்டசபைத் தேர்தலில் ஆளும் கட்சி சார்பில் போட்டியிட உள்ளார் என்ற தகவல், கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. இந்த செய்தி பலரிடையே ஆச்சரியத்தையும் விவாதத்தையும் ஏற்படுத்தியது.
சமீபத்தில் ‘அனோமி’ திரைப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பாவனாவிடம், இந்த வதந்தி குறித்து நேரடியாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த பாவனா, “இந்த செய்தியை நானும் பார்த்தேன். மிகவும் வேடிக்கையாக இருந்தது. பார்த்த உடனே சிரிப்பு வந்தது. யார் இப்படிப்பட்ட ஒரு கதையை உருவாக்கி பரப்புகிறார்கள் என்று தெரியவில்லை. ஆனால் இந்த செய்தியில் கொஞ்சம் கூட உண்மை இல்லை” என்று கூறி, இந்த அரசியல் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
