நாட்டுப்புற பாடல்களில் தனித்த அடையாளத்தை பெற்றவர் நாக துர்கா. இவர் ஒரு பாரம்பரிய நடனக் கலைஞராகவும் அறியப்படுகிறார். “தரிபொன்தொத்துண்டு” என்ற பாடலின் டிஜே பதிப்பு மூலம் இவர் பெரும் புகழ் பெற்றார். இந்தப் பாடல் சமூக ஊடகங்களில் வெளியாகி குறுகிய காலத்திலேயே வைரலானது. இதுவரை இந்த பாடல் யூடியூப் தளத்தில் 100 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது.
இவ்வாறு வைரலாக பிரபலமான நாக துர்காவுக்கு தற்போது தமிழ் திரையுலகிலும் வாய்ப்பு கிடைத்துள்ளது. ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ திரைப்படத்தில் நடித்த நடிகர் பவிஷ் கதாநாயகனாக நடிக்கும் புதிய தமிழ் திரைப்படத்தில், நாக துர்கா கதாநாயகியாக நடிக்கிறார். இதன் மூலம் அவர் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமாக உள்ளார்.
இந்நிலையில், சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற நாக துர்கா, நடிகர் பிரபாஸின் தீவிர ரசிகை என தெரிவித்துள்ளார். சிறுவயது முதலே பிரபாஸ் மீது தனக்கு அதிக ஈர்ப்பு இருந்ததாக கூறியுள்ளார். எட்டாம் அல்லது ஒன்பதாம் வகுப்பு படிக்கும் காலம் வரை, தனது அறை முழுவதும் பிரபாஸின் புகைப்படங்களை ஒட்டி வைத்திருந்ததாகவும் அவர் பகிர்ந்துள்ளார். இந்த தகவல் ரசிகர்களிடையே தற்போது வைரலாகி வருகிறது.
