சிறப்பு பாடல்களில் நடனமாடுவது தனக்கு விருப்பமான விஷயம் அல்ல என்று நடிகை ஸ்ரீலீலா சமீபத்தில் தெரிவித்துள்ளார். இருப்பினும், ‘புஷ்பா 2: தி ரூல்’ திரைப்படத்திற்காக மட்டுமே அந்த முக்கியமான முடிவை எடுத்ததாகவும் அவர் கூறியுள்ளார். தற்போது அவர் நடித்துள்ள ‘பராசக்தி’ திரைப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசும் போது, இந்த விஷயத்தை அவர் வெளிப்படையாக பகிர்ந்துள்ளார்.

அந்த நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், நான் நடிக்கும் திரைப்படங்களில் மட்டுமே நடனமாட வேண்டும் என்பதே என் விருப்பம். இனி பிற நடிகர்களின் படங்களில் இடம்பெறும் சிறப்பு பாடல்களில் ஆடுவதில் எனக்கு ஆர்வம் இல்லை. இருந்தாலும், ‘புஷ்பா 2’ படத்தில் நடனமாடிய முடிவை நான் சரியானதாகவே கருதுகிறேன். அந்த பாடல் மூலம் எனக்கு மிகப்பெரிய அளவில் ரீச் கிடைத்தது” என்று தெரிவித்தார்.
இந்நிலையில், சமீப காலமாக நடிகை ஸ்ரீலீலாவுக்கு திரைப்பட வாய்ப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் பிஸியாக நடித்து வரும் அவர், தற்போது ‘பராசக்தி’ திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த படம், வருகிற 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
