இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா மற்றும் ஸ்ரீலீலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள பராசக்தி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் படக்குழுவைச் சேர்ந்த பலரும் கலந்துகொண்டு, தங்களது அனுபவங்கள் மற்றும் கருத்துகளை மேடையில் பகிர்ந்து கொண்டனர்.

இந்த விழாவில் பேசிய நடிகர் ரவி மோகன், “எல்லாருக்கும் ஹாப்பி நியூ இயர். நான் இந்தப் படத்தை பார்த்துட்டேன். இந்த வருடத்தின் தலைசிறந்த படமாக இது மாறப்போகிறது என்பதில் எங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை. சிவகார்த்திகேயன் எவ்வளவு கடினமான உழைப்பை போட்டிருக்கிறார் என்பதைக் கண்கூடாக பார்க்க முடிகிறது. இங்கிருந்து அங்குவரை அவர் வந்த பயணம் சாதாரணமானது அல்ல. அவருடைய ரசிகர்கள் இதே மாதிரி அவரோடு தொடர்ந்து பயணிக்க வேண்டும். ஜி.வி. பிரகாஷ் இதை நூறாவது படம் என்று நினைக்காமல், முதல் படமாகவே நினைத்துக்கொள்ளுங்கள். இன்னும் நூறு படங்கள் நீங்கள் செய்ய வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன்.
இந்த படத்தில் ஒரு தீயை அழிக்க வேண்டும் என்ற முயற்சியில் நான் இருக்கிறேன். ஆனால், அந்த தீயை வெளியிலும் சிலர் அழிக்க முயற்சி செய்கிறார்கள். இந்த படத்தை நான் செய்ய ஒப்புக்கொண்டதற்கு ஒரு முக்கியமான காரணம் இருக்கிறது. அது ஒன்றே ஒன்றுதான். இந்த படம் சுயமரியாதையை காப்பாற்றுவது குறித்து பேசும் படம். என் வாழ்க்கையிலேயே நானும் என் சுயமரியாதையை மீண்டும் பெற்றுக்கொள்ள பல போராட்டங்களை சந்தித்திருக்கிறேன். எல்லாருக்கும் நான் சொல்ல விரும்புவது ஒன்றுதான். எந்த சூழ்நிலையிலும் உங்கள் சுயமரியாதையை மட்டும் விட்டுவிடாதீர்கள்” என உருக்கமாக பேசினார்.
