‘ஸ்டார்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, தொடர்ந்து தென்னிந்திய சினிமாவில் கவனம் பெற்று வரும் நடிகை பிரீத்தி முகுந்தன், சமீபத்தில் அளித்த ஒரு நேர்காணலில் நடிகர் விஜய் குறித்து பேசியது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

அவர் அந்த நேர்காணலில் பேசுகையில், “சின்ன வயதிலிருந்தே விஜய் படங்களை பார்த்துத்தான் வளர்ந்தோம். அவருடைய ‘துப்பாக்கி’ மற்றும் ‘கில்லி’ படங்கள் எனக்கு மிகவும் பிடித்தமானவை. விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை கண்டிப்பாக திரையரங்கில் பார்த்துவிடுவேன். அது ஒரு சகாப்தத்தின் முடிவைப் போல உணர வைக்கிறது. படப்பிடிப்பு காரணமாக ஜனநாயகன் இசை வெளியீட்டு விழாவிற்கு செல்ல முடியவில்லை” என்று கூறியுள்ளார்.
இதற்கிடையே, பிரீத்தி முகுந்தன் தற்போது மலையாளத்தில் ‘சர்வம் மாயா’ திரைப்படத்தில் நடித்துள்ளார். நிவின் பாலி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த படம் கடந்த 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படத்திற்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்து வருவதால், மலையாள ரசிகர்களிடையேயும் பிரீத்தி முகுந்தன் கவனம் பெறத் தொடங்கியுள்ளார்.
