நடிகர் டொவினோ தாமஸ் நடிப்பில் உருவாகி வரும் அடுத்த படமாக ‘பள்ளிச்சட்டம்பி’ திரைப்படம் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை உருவாக்கி வருகிறது. இந்த படத்தில் கதாநாயகியாக நடிகை கயாடு லோகர் நடித்து வருகிறார். இப்படத்தை இயக்குனர் டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கி வருகிறார். இவர் ஏற்கனவே பிரித்விராஜ் நடித்த, போலி என்கவுண்டரை மையமாகக் கொண்ட ‘ஜன கண மன’ திரைப்படத்தை இயக்கியவர் என்பதால், இந்த புதிய படத்துக்கும் கூடுதல் கவனம் கிடைத்துள்ளது. மேலும் ரசிகர்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் அளிக்கும் விதமாக, நடிகர் பிரித்விராஜையும் இந்த படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் டிஜோ ஜோஸ் ஆண்டனி இணைத்துள்ளார்.

‘ஜன கண மன’ திரைப்படத்தின் போது உருவான நட்பின் காரணமாகவே, பிரித்விராஜ் இந்த கதாபாத்திரத்தை ஏற்று நடித்து வருவதாக கூறப்படுகிறது. டொவினோ தாமஸ் வளர்ந்து வரும் நடிகராக இருந்த காலகட்டத்தில், பிரித்விராஜுடன் இணைந்து நடித்த ‘செவன்த் டே’, ‘என்னு நிண்டே மொய்தீன்’, ‘ஊழம்’ போன்ற படங்கள் அவருக்கு ரசிகர்களிடையே பெரிய அளவில் அடையாளத்தை உருவாக்கி தந்தன.
மேலும், பிரித்விராஜ் இயக்கத்தில் உருவான ‘லூசிபர்’ திரைப்படத்தின் முதல் பாகம் மற்றும் இரண்டாம் பாகத்திலும் டொவினோ தாமஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்த நீண்ட கால நட்பு மற்றும் பரஸ்பர புரிதலின் அடிப்படையில்தான், பிரித்விராஜ் இந்த ‘பள்ளிச்சட்டம்பி’ படத்திலும் இணைந்து நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
