இந்திய அளவில் முன்னணி நடிகராக திகழும் பிரபாஸ், அடுத்ததாக ‘தி ராஜா சாப்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த ஹாரர்-நகைச்சுவை கலந்த திரைப்படத்தை இயக்குநர் மாருதி இயக்கியுள்ளார். பீப்பிள் மீடியா பேக்டரி நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் நடிகைகள் மாளவிகா மோகனன், நிதி அகர்வால், ரித்தி குமார் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.

மேலும், நடிகர்கள் சஞ்சய் தத், போமன் இரானி, ஜரினா வஹாப் மற்றும் சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்துள்ளார். ‘தி ராஜா சாப்’ திரைப்படம் தமிழில் ஜனவரி 10ஆம் தேதியும், பிற மொழிகளில் ஜனவரி 9ஆம் தேதியும் வெளியாக உள்ளது.
இந்நிலையில், நேற்று இந்த திரைப்படத்தின் பிரீ-ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளினி, நடிகர் பிரபாஸிடம் ஒரு சுவாரஸ்யமான கேள்வியை முன்வைத்தார். அப்போது, “பிரபாஸை மணக்க விரும்பினால் எப்படி இருக்க வேண்டும்?” என்று எழுதப்பட்ட ஒரு பதாகையை ஒரு ரசிகர் காட்டியதாகவும், அதே கேள்வியை அவர் பிரபாஸிடம் கேட்டதாகவும் கூறப்படுகிறது. அதற்கு பதிலளித்த பிரபாஸ், அந்த உண்மை தெரியாமல்தான் நான் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை என்று கூறிய பதில் ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
