ஜி.வி.பிரகாஷ் குமார் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்துக்கு ‘நிஞ்சா’ என பெயரிடப்பட்டுள்ளது. முருகு இயக்கும் இப்படத்தில் ஜி.வி.பிரகாஷுடன் பாரத் மற்றும் பிரார்த்தனா நாதன் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ‘பார்க்கிங்’, ‘தலைவர் தம்பி தலைமையில்’ உள்ளிட்ட படங்களில் நடித்த பிரார்த்தனா நாதன் இப்படத்திலும் முக்கிய வேடத்தில் இடம்பெற்றுள்ளார்.
சினிஷ் மற்றும் லேஅர்ன் அண்ட் டீச் புரொடக்சன் தயாரிக்கும் இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். புதிய கதைக்களத்தில் உருவாகும் ‘நிஞ்சா’ மூலம் ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக களமிறங்குகிறார்.
இந்நிலையில், படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. மூன்று வாரங்களில் இந்த ஷெட்யூலை முடித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
