‘தமிழில் பல வெற்றிப்படங்களை இயக்கிய கார்த்திக் சுப்பராஜ், தற்போது தனது 10-வது திரைப்படத்தை முடித்துள்ளார். இந்த படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார் என்பது ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இதுவரை படம் தொடர்பான தலைப்பு மற்றும் நடிகர்கள் பற்றிய தகவல்களை ரகசியமாக வைத்திருந்த இயக்குநர், தற்போது ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
‘டோரதி’ என பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடித்துள்ளார். சனந்த் மற்றும் ரிஷிகாந்த் முக்கிய கதாபாத்திரங்களில் இடம்பெற்றுள்ளனர். படம் வரும் செப்டம்பர் 25-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் தனது மனதிற்கு மிகவும் நெருக்கமான கதை என்றும், பல ஆண்டுகளாக உருவாக்க விரும்பிய கனவு தற்போது நிறைவேறியுள்ளதாகவும் கார்த்திக் சுப்பராஜ் தெரிவித்துள்ளார். மேலும், டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் உலக அளவில் முதல்முறையாக திரையிடப்படுவதற்கும் படம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
