பாலிவுட் திரையுலகின் முக்கிய நடிகர்களில் ஒருவராக விளங்கும் சல்மான் கான், திரைப்படங்களோடு தொலைக்காட்சி உலகிலும் தனது செல்வாக்கை வலுவாக நிலைநிறுத்தியுள்ளார். குறிப்பாக பல ஆண்டுகளாக “பிக்பாஸ்” நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் அவர், இந்தியாவில் அதிக சம்பளம் பெறும் தொலைக்காட்சி தொகுப்பாளர்களில் ஒருவராக கருதப்படுகிறார். 60 வயதை கடந்தும் திருமணம் செய்யாத நிலையில் இருக்கும் சல்மான் கானின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பல ஆண்டுகளாக பல்வேறு காதல் மற்றும் டேட்டிங் செய்திகள் வெளியாகி வந்தன.
இந்த சூழலில் சமீபத்தில் தனது வாழ்க்கையைப் பற்றி மனம் திறந்து பேசிய சல்மான் கான், “தனிமை இப்போது எனக்கு மிக நெருக்கமான தோழனாக மாறிவிட்டது. வாழ்க்கையை அதன் இயல்பான பாதையில் செல்ல விட்டுவிட்டேன். அந்தப் போக்கில் நான் அமைதியாக பயணம் செய்து கொண்டிருக்கிறேன். எனக்கான நிம்மதியும் மகிழ்ச்சியும் இந்த தனிமை வாழ்க்கையில்தான் கிடைத்துள்ளது. அதற்கு நான் பழகி விட்டேன்; அதே வழியில் தொடர்வதே சிறந்தது” என்று கூறியுள்ளார்.
சல்மான் கானின் இந்த கருத்துகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன. பலரும் அவரது மனநிலையை புரிந்துகொண்டு ஆதரவு தெரிவித்து வருவதுடன், வாழ்க்கையைப் பற்றிய அவரது முதிர்ச்சியான அணுகுமுறை ரசிகர்களிடையே பெரும் கவனத்தை பெற்றுள்ளது.
