ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் ‘கிங்’ திரைப்படத்தை சித்தார்த் ஆனந்த் இயக்கி வருகிறார். இப்படத்தில் ஷாருக்கானுடன் அவரது மகள் சுகானா கான், தீபிகா படுகோனே, அபிஷேக் பச்சன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கும் இப்படம் ஹிந்தியில் உருவாகி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியாக உள்ளது.
‘கிங்’ திரைப்படம் வரும் டிசம்பர் 24ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், படத்தைப் பற்றிய அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாகாமல் இருந்ததால், திட்டமிட்ட தேதியில் படம் திரைக்கு வருமா என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. இதனால் ரிலீஸ் தள்ளிப்போகலாம் என்ற பேச்சுகளும் சமூக வலைதளங்களில் பரவின.
இந்த நிலையில், ரசிகர்களுடன் எக்ஸ் தளத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் ஷாருக்கான் இதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். ‘கிங்’ திட்டமிட்டபடி டிசம்பர் 24ஆம் தேதியே வெளியாகும் என்று அவர் உறுதிப்படுத்தியுள்ளார். ரசிகர்களும் பார்வையாளர்களும் ரசிக்கும் வகையில் படத்தை உருவாக்குவதில் தானும் இயக்குநர் சித்தார்த் ஆனந்தும் அதிக கவனம் செலுத்தி வருவதாக கூறியுள்ளார். அதே நேரத்தில், ‘கிங்’ படத்தில் உணர்வுப்பூர்வமான காட்சிகளுடன் நகைச்சுவைக்கும் முக்கியத்துவம் இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
