இயக்குநர் மணிரத்னத்தின் புதிய திரைப்படம் குறித்து தொடர்ந்து புதிய தகவல்கள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன. இந்தப் படத்தில் விஜய் சேதுபதி மற்றும் சாய் பல்லவி முதல் முறையாக இணைந்து நடித்து வருவது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில், படத்திற்கு சாய் அப்யங்கர் இசையமைக்கிறார் என்ற தகவல் பரவிய நிலையில், அது உண்மையல்ல என்றும், ஏ.ஆர். ரகுமான் தான் இசையமைப்பாளராக இணைந்துள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அழுத்தமான காதல் கதைக்களத்தில் உருவாகும் இந்தப் படத்தின் ஓடிடி உரிமையை, படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே நெட்பிளிக்ஸ் நிறுவனம் சுமார் 40 கோடி ரூபாய்க்கு கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும், படத்தின் நடிகர்கள், தொழில்நுட்பக் குழு மற்றும் வெளியீட்டு தேதி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
தற்போது கொல்கத்தாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் படப்பிடிப்பில், ஹவுரா பாலத்தில் நள்ளிரவு நேரங்களில் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. அங்கிருந்து வெளியான பிரத்யேக புகைப்படங்களில், மீசை மற்றும் தாடி இல்லாத புதிய தோற்றத்தில் விஜய் சேதுபதி இடம்பெற்றிருப்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும், விஜய் சேதுபதி – சாய் பல்லவி கூட்டணியின் இந்தப் படம் மீதான எதிர்பார்ப்பும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
