தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் முன்னணி நடிகையாக தன்னை நிலைநிறுத்தியுள்ள பூஜா ஹெக்டே, தமிழில் ‘முகமூடி’, ‘பீஸ்ட்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், அவர் பேசிய கருத்துகள் தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.
அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பூஜா ஹெக்டே, திரையுலகில் நீண்ட காலம் நிலைத்து நிற்க வேண்டுமெனில் மனநிலையே மிக முக்கியம் என்று குறிப்பிட்டார். “சினிமா என்பது புதைமணலைப் போன்றது. அதில் எச்சரிக்கையின்றி நடந்தால் எளிதில் சிக்கிக்கொள்ள நேரிடும். ஒருமுறை அதில் மூழ்கத் தொடங்கினால் மீண்டு வருவது கடினம். அதனால்தான் போட்டி இருந்தாலும், மற்றவர்களைப் பார்த்து பொறாமைப்படாமல் நம் பாதையில் முன்னேற வேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.
மேலும் தனது அனுபவத்தை பகிர்ந்த பூஜா ஹெக்டே, இந்தத் துறையில் வெற்றி பெற திறமை மட்டுமல்ல, இடைவிடாத உழைப்பும் தன்னம்பிக்கையும் அவசியம் என்றார். “இன்று உயர்ந்த இடத்தில் இருப்பவர்கள் அனைவரும் ஒருகட்டத்தில் தோல்வி, அவமானம், ஏமாற்றம் போன்றவற்றை சந்தித்தவர்கள்தான். அவற்றைக் கடந்து முன்னேறுபவர்களுக்கே வெற்றி நிலைத்து நிற்கும்” என அவர் கூறிய கருத்து பலரின் பாராட்டைப் பெற்றுள்ளது.
—
