இயக்குநர் வெங்கி அட்லூரியின் புதிய படைப்பான ‘விஷ்வநாத் & சன்ஸ்’ தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. நடிகர் சூர்யா கதாநாயகனாக நடித்துள்ள இந்தப் படம் குறித்து அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் பகிர்ந்த தகவல்கள் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளன.
2018-ஆம் ஆண்டு வெளியான ‘தொலி பிரேமா’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான வெங்கி அட்லூரி, முதல் படத்திலேயே விமர்சன ரீதியிலும் வசூல் ரீதியிலும் வெற்றியை பதிவு செய்தார். அதன்பிறகு ‘மிஸ்டர் மஜ்னு’, ‘ரங் தே’ ஆகிய படங்களை இயக்கிய அவர், தனுஷ் நடித்த ‘வாத்தி’ திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடமும் அறிமுகமானார். பின்னர் துல்கர் சல்மானை வைத்து இயக்கிய ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று, அவரது இயக்குநர் பயணத்தில் முக்கியமான திருப்புமுனையாக அமைந்தது.
தற்போது அவர் இயக்கி வரும் ‘விஷ்வநாத் & சன்ஸ்’ திரைப்படம் குடும்ப உறவுகள் மற்றும் ஆக்ஷன் அம்சங்களை மையமாகக் கொண்டு உருவாகி வருகிறது. சூர்யாவுடன் இணைந்து மமிதா பைஜூ, ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன், பவானி ஸ்ரீ உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதுகுறித்து பேசிய வெங்கி அட்லூரி, ‘வாத்தி’ தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் உருவானாலும், ‘விஷ்வநாத் & சன்ஸ்’ முழுமையாக தமிழில் உருவாக்கப்பட்டு பின்னர் தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். சூர்யாவுடன் நேரடியாக ஒரு தமிழ் திரைப்படம் செய்ய வேண்டும் என்பது தனது நீண்ட நாள் விருப்பம் என்றும், அது இந்தப் படத்தின் மூலம் நிறைவேறியுள்ளதாகவும் கூறினார். மேலும், ஓடிடி தளங்களின் வளர்ச்சிக்குப் பிறகு தெலுங்கில் தனுஷுக்கு கிடைத்த வரவேற்பும், ‘வாத்தி’ போன்ற முயற்சிகளை உருவாக்க ஊக்கமாக இருந்ததாக அவர் பகிர்ந்துள்ளார்.
—
