‘நீட்’ வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையுடன், கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். நாடாளுமன்றத்தை நோக்கி நடைபெற்ற பேரணியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் பங்கேற்ற நிலையில், பாதுகாப்பு நடவடிக்கையாக காவல்துறை தடியடி மற்றும் கண்ணீர் புகைக்குண்டுகளை பயன்படுத்தியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த மோதலில் பலர் காயமடைந்ததுடன், சம்பவம் நாடு முழுவதும் கடும் எதிர்ப்பை கிளப்பியுள்ளது.
இந்த விவகாரத்திற்கு அரசியல் கட்சிகள் மட்டுமல்லாமல், சினிமா மற்றும் விளையாட்டுத் துறையைச் சேர்ந்த பல பிரபலங்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில், பாலிவுட் நடிகர் சல்மான் கானும் முதல் முறையாக மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார். அமைதியான போராட்டம் வன்முறையாக மாறியது வருத்தமளிப்பதாகவும், பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் தனது அனுதாபத்தைத் தெரிவித்தும் அவர் பதிவிட்டுள்ளார்.
மேலும், தரமான கல்வி அமைப்பை உருவாக்க மாணவர்கள் ஒன்றிணைந்து குரல் கொடுப்பது பாராட்டத்தக்கது என்றும், கல்வி தொடர்பான பிரச்சினைகளை அரசியல் லாபத்திற்காக பயன்படுத்தக் கூடாது என்றும் சல்மான் கான் வலியுறுத்தியுள்ளார். மாணவர்களின் நேர்மையும் அர்ப்பணிப்பும் இந்தியாவின் எதிர்காலத்தை வலுப்படுத்தும் என குறிப்பிட்ட அவர், இந்தியா உலகின் முக்கிய கல்வி மையமாக உயர வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும் தெரிவித்துள்ளார்.
