‘தி இந்தியா ஸ்டோரி’ திரைப்படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் பங்கேற்று வரும் நடிகை காஜல் அகர்வால், தென்னிந்திய திரைப்படத் துறையைப் பற்றிய தனது பாராட்டுகளை பகிர்ந்துள்ளார். அவரது கருத்துகள் தற்போது திரையுலகில் பேசுபொருளாக மாறியுள்ளன. பல மொழிகளில் நடித்திருந்தாலும், கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளையே தொடர்ந்து தேர்வு செய்து வருவதாக காஜல் அகர்வால் தெரிவித்துள்ளார். ‘பழனி’, ‘துப்பாக்கி’, ‘ஜில்லா’, ‘கோமாளி’, ‘இந்தியன் 2’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்த அவர், திருமணத்திற்குப் பிறகும் அதே அணுகுமுறையை பின்பற்றி வருகிறார்.
சமீபத்திய பேட்டியில், அதிக படங்களில் நடிப்பதைவிட, தரமான கதாபாத்திரங்களை கொண்ட திரைப்படங்களில் இடம்பெறுவதையே விரும்புவதாக அவர் கூறினார். தனக்கு பிடித்த வலுவான கதாபாத்திரங்கள் தென்னிந்திய சினிமாவில் அதிகமாக கிடைத்ததால், அந்தத் துறைக்கு முன்னுரிமை அளித்ததாகவும் தெரிவித்தார்.
மேலும், நேரம் தவறாமை மற்றும் தொழில்முறை ஒழுக்கம் ஆகியவற்றில் தென்னிந்திய திரையுலகம் முன்னுதாரணமாக இருப்பதாக அவர் பாராட்டினார். பெண்களை மையமாகக் கொண்ட கதைகள் தொடர்ந்து உருவாகி வருவது ஆரோக்கியமான மாற்றம் என்றும் அவர் குறிப்பிட்டார்.இதற்கிடையில், சாகர் பி. ஷிண்டே தயாரிப்பில் டி.கே. சேட்டன் இயக்கியுள்ள ‘தி இந்தியா ஸ்டோரி’ திரைப்படத்தில் ஷ்ரேயாஸ் தல்படேவுடன் காஜல் அகர்வால் நடித்துள்ளார். ஜீ ஸ்டூடியோஸ் வெளியிடும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் ஜூலை 24-ஆம் தேதி வெளியாக உள்ளது.
