மலையாள சினிமாவில் அறிமுகமாகி தென்னிந்திய அளவில் பிரபலமான நடிகையாக உயர்ந்தவர் அனுபமா பரமேஸ்வரன். 2015ம் ஆண்டு வெளியான ‘பிரேமம்’ திரைப்படம் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த அவர், அதன் பின்னர் ‘கொடி’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகிலும் அறிமுகமானார். தொடர்ந்து பல்வேறு மொழி படங்களில் நடித்து வந்த அனுபமா சமீபத்தில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான ‘பைசன்’ படத்தில் நடித்து பாராட்டுகளை பெற்றார்.
சமீபத்தில், நடிகை அனுபமா பரமேஸ்வரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவு தற்போது ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது. அந்த பதிவில் அவர் தனது வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து உருக்கமாக குறிப்பிட்டுள்ளார். அதில், சில நேரங்களில் வாழ்க்கையில் நிம்மதியை பெறுவதற்காக நமக்கு எந்த பயனும் இல்லாத சில விஷயங்களை விட்டு விலக வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இன்று அந்த அமைதி என்னை வந்து சேர்ந்துள்ளது. இனி என்னுடைய குரலை நானே தேர்வு செய்யப் போகிறேன். என் வாழ்க்கைக்கான முடிவுகளை நானே எடுக்கப் போகிறேன். இனி யாருடைய அனுமதிக்காகவும் காத்திருக்க வேண்டியதில்லை. எந்த பயமும் இல்லை. மீண்டும் என்னை நானே உணர்ந்து கொண்டிருக்கிறேன்.
நான் ஒருகாலத்தில் என்னுடையது என்பதை மறந்திருந்த அந்த வாழ்க்கையை மீண்டும் நேசிக்க தொடங்கியுள்ளேன். நீண்ட நாட்களாக மனதில் வைத்திருந்த ஒரு விஷயத்தை தற்போது பகிர்கிறேன். அதை சொல்லும் வாய்ப்பு நீண்ட காலமாக எனக்கு கிடைக்காமல் இருந்தது. எனக்கு உறுதுணையாக இருந்ததற்கும், என் மீது நம்பிக்கை வைத்ததற்கும், என் வாழ்க்கையில் அன்பை நிறைத்ததற்கும் நன்றி. இதை முன்பே வெளிப்படுத்தவில்லை என்றாலும், அந்த நன்றியும் அன்பும் எப்போதும் என் மனதில் இருந்தது என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.
எனக்கு மிகவும் கடினமான தருணங்களில் உங்களின் ஒவ்வொரு செய்தியும், பிரார்த்தனையும், அன்பான செயல்களும் எனக்கு மிகப்பெரிய ஆதரவாக அமைந்தன. மீண்டும் என்னை எனக்கே திரும்ப அழைத்து வந்த இந்த பிரபஞ்சத்திற்கு நன்றி. மனம் குணமடைவதை கொண்டாடுவோம். சுதந்திரத்தை கொண்டாடுவோம். என்னை நானே தேர்வு செய்வதை கொண்டாடுவோம். இறுதியாக, எந்த தயக்கமும் இல்லாமல் முழுமையாக எனக்கானதாக இருக்கும் வாழ்க்கையை கொண்டாடுவோம்” என்று தெரிவித்துள்ளார்.
—
