தென்னிந்தியத் திரையுலகின் இசைக் குயிலாக போற்றப்பட்ட பின்னணி பாடகி எஸ். ஜானகி நேற்று காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகினர், அரசியல் தலைவர்கள், இசைக் கலைஞர்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து, அவரது இசைப் பயணத்தை நினைவுகூர்ந்து வருகின்றனர்.நான்கு தேசிய விருதுகள் உள்ளிட்ட ஏராளமான விருதுகளைப் பெற்றிருந்த எஸ். ஜானகி, 2013-ஆம் ஆண்டு மத்திய அரசு வழங்குவதாக அறிவித்த ‘பத்மபூஷன்’ விருதை ஏற்க மறுத்தது அப்போது பெரும் பேசுபொருளானது. அந்த முடிவில் அவர் இறுதி வரை உறுதியாக இருந்தார்.
இதுகுறித்து பின்னர் கேரளாவில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய அவர், “மத்திய அரசு அன்புடன்தான் இந்த விருதை வழங்குகிறது. அதற்காக அவர்களை நான் குறை சொல்லவில்லை. ஆனால், 55 ஆண்டுகளுக்கும் மேலாக நான் பாடி வருகிறேன். பல மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ளேன். ஒவ்வொரு மொழியிலும் அந்த மண்ணின் உச்சரிப்போடு பாடியிருக்கிறேன் என்று பலரும் பாராட்டியுள்ளனர்” என்று தெரிவித்தார்.
மேலும், “அப்படிப்பட்ட எனக்கு இன்னும் உயர்ந்த விருது வழங்கப்பட வேண்டும். பாரத ரத்னா கொடுத்தால் வாங்குவேன். இல்லையென்றால் எந்த விருதின் மீதும் எனக்கு ஆர்வம் இல்லை. விருதுகளுக்காக நான் பாடவில்லை. ரசிகர்களின் அன்புக்காகத்தான் பாடினேன். மத்திய அரசுக்கு விருப்பம் இருந்தால் பாரத ரத்னா வழங்கட்டும். இல்லையென்றால் எந்த விருதும் தேவையில்லை. ரசிகர்களின் அன்பே எனக்குக் கிடைத்த மிகப்பெரிய விருது. அதைவிட சிறந்த அங்கீகாரம் வேறு எதுவும் இல்லை. பத்ம விருதுகளை நான் வாங்கப் போவதில்லை,” என தனது நிலைப்பாட்டை வெளிப்படையாக தெரிவித்திருந்தார்.
