கன்னடம் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் நபா நடேஷ், தற்போது ‘ஸ்வயம்பு’ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இதைத் தொடர்ந்து மேலும் சில புதிய படங்களிலும் அவர் கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நபா நடேஷ் பேசிய சில விஷயங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிக கவனம் பெற்று வருகின்றன.
அப்போது தனது திரைப்பயணம் மற்றும் தென்னிந்திய மொழிகளில் நடிக்கும் ஆசை குறித்து பேசிய நபா நடேஷ், “நான் தற்போது கன்னடம் மற்றும் தெலுங்கு சினிமாவில் தொடர்ந்து நடித்து வருகிறேன். இருப்பினும், தமிழ் மற்றும் மலையாளம் உள்ளிட்ட அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் நடிக்க வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் ஆசை. அதற்கான சரியான வாய்ப்பும், காலமும் அமையும் போது நிச்சயமாக அந்த ஆசை நிறைவேறும் என்று நம்புகிறேன்.
பலரும் என்னை பார்த்துவிட்டு, ‘நீங்கள் மிகவும் சாதுவாக இருக்கிறீர்கள்… ரொம்பவும் பயந்த சுபாவம் கொண்டவரா?’ என்று என்னிடம் கேட்டிருக்கிறார்கள். வெளியில் பார்க்கும்போது நான் அப்படித் தோன்றலாம். ஆனால், எனக்குள் இன்னொரு முகமும் இருக்கிறது. என்னிடம் அன்பாக இருப்பவர்களிடம் நானும் அன்பாக இருப்பேன். அதே நேரத்தில், என்னிடம் வம்பு செய்பவர்களிடம் வம்புக்கு வம்பாக இருப்பேன். அதுதான் என்னுடைய உண்மையான குணம்” என்று நபா நடேஷ் தெரிவித்துள்ளார்.
—
