கடந்த 2013-ஆம் ஆண்டு அல்போன்ஸ் புத்ரன் இயக்கத்தில் வெளியான ‘நேரம்’ திரைப்படம், அதில் நடித்த நிவின் பாலி, நஸ்ரியா, பாபி சிம்ஹா உள்ளிட்ட பலரின் திரைப்பயணத்தில் முக்கிய திருப்புமுனையாக அமைந்து, அவர்களை முன்னணி நட்சத்திரங்களின் வரிசையில் கொண்டு சென்றது. அந்த திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அல்போன்ஸ் புத்ரன் மீண்டும் நிவின் பாலியை கதாநாயகனாக வைத்து 2015-ஆம் ஆண்டு ‘பிரேமம்’ என்ற மாபெரும் வெற்றித் திரைப்படத்தை இயக்கினார். தொடர்ந்து வெற்றிப் படங்களை வழங்கிய இந்த கூட்டணி மீண்டும் இணையுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நீண்ட காலமாக இருந்து வந்தது. இருப்பினும், கடந்த 11 ஆண்டுகளாக இவர்கள் இருவரும் எந்த திரைப்படத்திலும் இணைந்து பணியாற்றவில்லை. இந்த நிலையில், தற்போது அல்போன்ஸ் புத்ரன் இயக்கும் புதிய திரைப்படத்தில் நிவின் பாலி கதாநாயகனாக நடிக்க உள்ளார்.
இந்த திரைப்படம் நிவின் பாலியின் 50-வது திரைப்படமாக உருவாக உள்ளது. இப்படத்தின் அதிகாரப்பூர்வ தலைப்பு வெளியீட்டு விழா வருகிற ஜூன் 27-ஆம் தேதி நடைபெற உள்ளது. ‘பிரேமம்’ திரைப்படத்திற்குப் பிறகு பல ஆண்டுகளாக எந்த திரைப்படத்தையும் இயக்காமல் இருந்த அல்போன்ஸ் புத்ரன், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பிரித்விராஜ் மற்றும் நயன்தாரா இணைந்து நடித்த ‘கோல்டு’ திரைப்படத்தை இயக்கியிருந்தார்.
ஆனால், அந்த திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாமல் தோல்விப் படமாக அமைந்தது. அதன் பின்னர் இயக்குநர் பணியிலிருந்து சற்று விலகி, சமீப காலமாக நடிகராக பல படங்களில் தொடர்ந்து நடித்து வந்த அல்போன்ஸ் புத்ரன், தற்போது மீண்டும் நிவின் பாலியுடன் இணைந்து திரைப்படம் இயக்க இருப்பது ரசிகர்களிடையே மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
—
