ஐபிஎல் தொடரின் முன்னாள் தலைவரான லலித் மோடி, சமீபத்தில் அளித்த பேட்டியில் தனது வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட சுயசரிதை திரைப்படம் உருவாக இருப்பதாக தெரிவித்துள்ளார். ஏற்கனவே தாவூத் இப்ராஹிமின் அச்சுறுத்தலால் கிரிக்கெட் நிர்வாகத்தில் இருந்து விலக நேரிட்டதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருந்த லலித் மோடி, தற்போது தனது வாழ்க்கைக் கதையை திரைப்படமாக கொண்டு வருவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக கூறியுள்ளார்.
அவரது சுயசரிதை படத்திற்கான திரைக்கதை உருவாக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும், இதில் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு லண்டனில் ரன்வீர் சிங் தன்னை சந்தித்தபோது, தனது வாழ்க்கையில் மிகவும் ஆவலுடன் நடிக்க விரும்பும் கதாபாத்திரம் லலித் மோடியின் வாழ்க்கை கதாபாத்திரம்தான் என்று கூறியதாக அவர் நினைவுகூர்ந்தார்.
மேலும், கடந்த இரண்டு ஆண்டுகளில் ‘துரந்தர்’ திரைப்படத்தின் வெற்றியால் ரன்வீர் சிங் தனது திரைப்பயணத்தில் மேலும் உயர்ந்துள்ளதாகவும், தற்போதும் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க அவர் ஆர்வமாக உள்ளாரா என்பது குறித்து தெரியவில்லை என்றும் லலித் மோடி கூறியுள்ளார். இதுதொடர்பாக விரைவில் அவருடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் லலித் மோடியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகும் முயற்சி பாலிவுட்டில் புதிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
