தமிழ் சினிமாவில் பின்னணி நடனக் கலைஞராக தனது கலைப்பயணத்தைத் தொடங்கி, தனது கடின உழைப்பு மற்றும் திறமையால் இன்று முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக உயர்ந்திருப்பவர் ராகவா லாரன்ஸ். நடன இயக்குநர், நடிகர், இயக்குநர் என பல்வேறு துறைகளில் தனது முத்திரையை பதித்துள்ள அவர், தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார்.
தமிழ் சினிமாவில் பேய் கதைகளுடன் நகைச்சுவையை இணைத்து ‘ஹாரர்-காமெடி’ என்ற புதிய போக்கை வெற்றிகரமாக அறிமுகப்படுத்தியவர் ராகவா லாரன்ஸ். குறிப்பாக ‘முனி’ மற்றும் ‘காஞ்சனா’ திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்று, இந்த வகை திரைப்படங்களுக்கு தனி ரசிகர் வட்டத்தை உருவாக்கின. அதனைத் தொடர்ந்து ‘டான்’, ‘பாண்டி’, ‘சிவலிங்கா’, ‘சந்திரமுகி 2’, ‘ஜிகர்தண்டா டபுள்எக்ஸ்’ உள்ளிட்ட பல திரைப்படங்களிலும் அவர் தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.
தற்போது அவரது இயக்கத்தில் ‘காஞ்சனா 4’ திரைப்படத்தின் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதேபோல், நடிகராக ‘புல்லட்’ திரைப்படத்திலும் அவர் நடித்து வருகிறார். சினிமாவைத் தாண்டியும், ஏழை மற்றும் எளிய மக்களின் கல்வி மற்றும் மருத்துவ தேவைகளுக்காக தனது சொந்த செலவில் உதவிகள் செய்து வருவதால், சமூகத்திலும் மிகுந்த மரியாதையை பெற்றவராக திகழ்கிறார்.இந்த நிலையில், தனது சொந்த தயாரிப்பில் ‘காஞ்சனா 4’ திரைப்படத்தை உருவாக்கி வரும் ராகவா லாரன்ஸ், அடுத்ததாக தனது மகள் ராகவியை இயக்குநராக அறிமுகப்படுத்தும் திரைப்படத்தை தயாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ராகவி அமெரிக்காவில் திரைப்பட உருவாக்கம் தொடர்பான படிப்பை நிறைவு செய்துள்ளார். தற்போது இயக்குநராக தனது திரைப்பயணத்தைத் தொடங்குவதற்கான அனைத்து பணிகளிலும் அவர் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகவும், விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
