கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவாக ஆண்டுதோறும் நடத்தப்படும் ஹைகூ கவிதைப் போட்டியை இயக்குநர் லிங்குசாமி தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக வெற்றிகரமாக நடத்தி வருகிறார். இந்த ஆண்டுக்கான போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் லிங்குசாமி, முதலமைச்சர் விஜயின் அரசியல் வெற்றி குறித்து தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். தேர்தல் முடிவுகள் வெளியாகும் காலத்தில் பல்வேறு தரப்பினரும் தவெக-வுக்கு ஆதரவாக வாக்களித்ததாக தன்னிடம் கூறியதை நினைவுகூர்ந்த அவர், அப்போதே ஒரு பெரிய மாற்றம் நடைபெறப்போகிறது என்ற உணர்வு ஏற்பட்டதாக தெரிவித்தார்.
மேலும், “சினிமாவிலிருந்து அரசியலுக்கு வந்த பிறகு மக்களும் அரசியலில் அதிக ஈடுபாடு காட்ட ஆரம்பித்தார்கள். சட்டசபையில் ஒரு சூப்பர் ஸ்டார் இருப்பதால் மக்கள் தொடர்ந்து அரசியல் நிகழ்வுகளை கவனிக்கத் தொடங்கியுள்ளனர். அது தற்போது மதிப்புமிக்க வரலாற்று பதிவாக மாறியுள்ளது” என்று கூறினார்.
தொடர்ந்து விஜயின் எளிமை குறித்து பேசிய லிங்குசாமி, தயாரிப்பாளர் சௌத்ரியின் மறைவின் போது அஞ்சலி செலுத்த வந்த விஜய், காரில் ஏறிய பிறகும் மீண்டும் இறங்கி வந்து தன்னிடம் கைகுலுக்கி பேசிய சம்பவத்தை நினைவுகூர்ந்தார். “காரிலிருந்தபடியே கை அசைத்து சென்றிருக்கலாம். ஆனால் அவர் நேரில் வந்து பேசினார். அந்த இடத்திற்காக அவர் கடுமையாக உழைத்திருக்கிறார். காலத்தோடு மிகவும் இணைந்திருப்பவர். படப்பிடிப்பிற்கும் சொன்ன நேரத்தில் வந்து நிற்பார். அதனால்தான் காலம் அவருக்கு இந்த வெற்றியை திருப்பிக் கொடுத்திருக்கிறது” என்று லிங்குசாமி பாராட்டினார்.
