மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களாக விளங்கும் ஜெயராம் மற்றும் ஊர்வசி இணைந்து இதுவரை 26-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் ஜோடியாக நடித்துள்ளனர். இவர்களின் திரை ஜோடி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதுடன், நகைச்சுவை மற்றும் குடும்பக் கதைகளில் தனித்துவமான இடத்தையும் பிடித்தது. தற்போது சுமார் 20 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு, இந்த பிரபல ஜோடி மீண்டும் தமிழில் ‘பரிமளா அண்ட் கோ’ திரைப்படத்தின் மூலம் இணைந்து நடித்துள்ளனர். இந்தப் படத்தை இயக்குநர் பாண்டிராஜ் இயக்கியுள்ளார்.
இந்த நிலையில், ஊர்வசியுடன் மீண்டும் இணைந்து நடித்த அனுபவம் குறித்து நடிகர் ஜெயராம் மனம் திறந்து பேசியுள்ளார். அவர் கூறுகையில், “1988-ம் ஆண்டிலிருந்து நான் ஊர்வசியுடன் தொடர்ந்து பல படங்களில் நடித்திருக்கிறேன். இயக்குநர் பாண்டிராஜ் ‘பரிமளா அண்ட் கோ’ படத்தின் கதையை என்னிடம் சொல்லிக்கொண்டிருந்தபோது, நடுவிலேயே நான் அவரை நிறுத்தி, ‘இந்தக் கதாபாத்திரத்தில் ஊர்வசி நடித்தால் மிகவும் சிறப்பாக இருக்கும்’ என்று உடனடியாக சொன்னேன். அதற்கு அவர் ஏற்கனவே ஊர்வசியிடம் கதை சொல்லிவிட்டதாக கூறியதும் எனக்கு அளவில்லாத ஆச்சரியமும் மகிழ்ச்சியும் ஏற்பட்டது.
நாங்கள் இருவரும் இணைந்து 26-க்கும் மேற்பட்ட படங்களில் ஹீரோ, ஹீரோயினாக நடித்துள்ளோம். ஊர்வசி பல மாநில விருதுகளை பெற்றுள்ளார். அதில் பெரும்பாலானவை நாங்கள் இணைந்து நடித்த திரைப்படங்களுக்காக கிடைத்தவை. நாங்கள் நடித்த ஒவ்வொரு படமும் எங்களுக்கு தனித்துவமான அனுபவமாக இருந்தது. எங்களது காமெடி காட்சிகள் குறித்து ரசிகர்கள் எப்போதும் அதிகமாக பேசுவார்கள். உண்மையாகச் சொன்னால், அழுவது போல நடிப்பது கூட எளிது. ஆனால் மற்றவர்களை சிரிக்க வைக்கும் விதத்தில் காமெடி செய்வது மிகவும் கடினமான விஷயம். அதற்கு முழுமையான நடிப்பு திறன் தேவைப்படுகிறது.
கதையுடன் கலந்த நகைச்சுவை எங்களது பல படங்களுக்கு வெற்றியைத் தந்தது. அதேபோல் சீரியஸ் கதைகளிலும் எங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. ஊர்வசியின் திரை அனுபவம் மிகவும் பெரியது. அவருடன் நடித்தால், அவருடன் இருக்கும் நடிகர்களும் சிறப்பாக நடிக்கத் தூண்டப்படுவார்கள். மலையாளத்தில் அவருடன் நடித்தபோது, நாங்கள் எல்லோரும் மிகவும் எச்சரிக்கையாக இருப்போம். ஏனெனில், ஒரு சிறிய தருணத்திலேயே தனது நடிப்பால் அனைவரையும் மிஞ்சி பார்வையாளர்களிடம் பெரும் கைதட்டலை பெற்றுவிடுவார். அதனால் அவருடன் நடிக்கும்போது ஒரு இனிய பயம் இருக்கும். நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் அவருடன் இணைந்து நடித்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
