‘ரசிகன்’, ‘விஷ்ணு’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் இணைந்து நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் ரசிகர்களால் மிகவும் விரும்பப்பட்ட ஜோடியாக நடிகர் விஜய்யும் நடிகை சங்கவியும் திகழ்ந்தனர். அந்த காலகட்டத்தில் இவர்களின் திரை ஜோடி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதுடன், பல வெற்றிப்படங்களையும் வழங்கியது. தற்போது நடிகர் விஜய் தமிழகத்தின் முதல்-அமைச்சராக பொறுப்பேற்று அரசியல் துறையில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.
கர்நாடகாவைச் சேர்ந்த நடிகை சங்கவி, நடிகர் அஜித் நடித்த ‘அமராவதி’ திரைப்படத்தின் மூலம் தமிழ்சினிமாவில் அறிமுகமானார். அதன் பின்னர் தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் 80-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக தமிழில் நடிகர் விஜய்யுடன் அதிகமான படங்களில் கதாநாயகியாக நடித்த நடிகைகளில் சங்கவியும் ஒருவர். அதேபோல் கமல்ஹாசன், ரஜினிகாந்த், சத்யராஜ், சரத்குமார் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.கடந்த 2016-ம் ஆண்டு வெங்கடேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்ட சங்கவிக்கு தற்போது ஒரு பெண் குழந்தை உள்ளது. திருமணத்திற்குப் பிறகு சினிமாவில் இருந்து ஓரளவு விலகியிருந்த அவர், தற்போது சின்னத்திரை தொடர்களில் நடித்துவருகிறார்.
இந்த நிலையில், தமிழக முதல்-அமைச்சராக உள்ள விஜய் குறித்து நடிகை சங்கவி கருத்து தெரிவித்துள்ளார். அதில், “முதல்-அமைச்சர் விஜய் எப்போதும் நல்ல விஷயங்களையே செய்வார். எந்த முடிவையும் எடுப்பதற்கு முன்பு பலமுறை யோசித்து செயல்படக்கூடியவர். அதனால் சில விஷயங்களுக்கு நேரம் எடுத்துக் கொள்வார். ஆனால் அவர் நிச்சயமாக மக்களுக்கு பயனுள்ள நல்ல திட்டங்களை கொண்டு வருவார் என்ற நம்பிக்கை எங்களுக்குள்ளது.
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் விஜய்யை மிகவும் பிடிக்கும். மக்கள் மனதில் இடம்பிடித்ததால்தான் இன்று அவர் இந்த உயர்ந்த நிலைக்கு வந்துள்ளார். அவர் கண்டிப்பாக மக்களுக்காக நல்லதை செய்வார் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
