நடிகர் சூர்யா மற்றும் நடிகை திரிஷா இணைந்து நடித்துள்ள ‘கருப்பு’ திரைப்படம் கடந்த 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த திரைப்படத்தில் சுவாசிகா, இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, அனகா, மாயா ரவி மற்றும் நட்டி நட்ராஜ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் இந்த திரைப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி இயக்கியுள்ள இந்த படம், வெளியான நாள்முதல் ரசிகர்களின் நல்ல வரவேற்பை பெற்று தொடர்ந்து வெற்றிகரமாக ஓடி வருகிறது. குறிப்பாக தமிழ்நாட்டில் மட்டும் ரூ.100 கோடி வசூல் செய்துள்ளதாகவும், உலகளவில் ரூ.207 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகவும் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த நிலையில், படத்திற்கு கிடைத்து வரும் மக்களின் ஆதரவு மற்றும் வெற்றியை முன்னிட்டு இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி, மதுரை அழகர்கோயிலில் உள்ள பதினெட்டாம்படி கருப்பணசாமிக்கு 18 அடி உயர அரிவாளை காணிக்கையாக செலுத்தியுள்ளார். இந்த நிகழ்வில் ஏராளமான சூர்யா ரசிகர்களும், பக்தர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். தற்போது இந்த நிகழ்வின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
