தமிழில் ‘கொலை’, ‘சிங்கப்பூர் சலூன்’, ‘தி கோட்’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த நடிகை மீனாட்சி சவுத்ரி, தெலுங்கில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்திற்குப் பிறகு பான் இந்தியா நடிகையாக உயர்ந்துள்ளார். தற்போது நாக சைதன்யாவுடன் இணைந்து ‘விருஷகர்மா’ திரைப்படத்தில் நடித்துவரும் அவர், இதுதவிர இரண்டு புதிய இந்தி திரைப்படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார்.
இந்த நிலையில், சமீபத்தில் நடைபெற்ற பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை மீனாட்சி சவுத்ரி, தமிழக முதல்-அமைச்சரும் நடிகருமான விஜய் குறித்து மிகவும் பாராட்டுக்களுடன் பேசியுள்ளார். அவர் கூறியதாவது, “விஜய் சார் மாதிரி ஒழுக்கமும் கட்டுப்பாடும் கொண்ட மனிதரை நான் இதுவரை பார்த்ததே இல்லை. காலை 7 மணிக்கு ஷாட் என்றால், சரியாக 7 மணிக்கே ஸ்பாட்டில் இருப்பார். பிறரின் நேரத்தை மிகவும் மதிப்பார். ‘ஆக்ஷன்’ என்று சொல்லும் வரை மிகவும் அமைதியாக இருப்பார். ஆனால் கேமரா ஆன் ஆன பிறகு முழுமையாக வேறொரு மனிதராக மாறிவிடுவார்” என்று தெரிவித்தார்.
மேலும் அவர் பேசுகையில், “விஜய் அவர்கள் முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு, தேர்தல் முடிவுகள் வெளியான உடனேயே நான் அவருக்கு வாழ்த்து செய்தி அனுப்பினேன். அதற்கு பதில் வர சில நாட்கள் ஆகும் என்று நினைத்தேன். ஆனால் அவர் உடனடியாக ‘தேங்க்யூ’ என்று பதில் அனுப்பினார். நம்முடன் இணைந்து பணியாற்றிய ஒருவர் இன்று இத்தனை உயரத்திற்கு சென்றிருப்பது எனக்கு மட்டுமல்ல அனைவருக்கும் பெருமையாக இருக்கிறது. அவர் இன்னும் பல உயரங்களை அடைவார் என்று நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
