நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘சேயோன்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன்பு மதுரையில் தொடங்கப்பட்ட நிலையில், தற்போது படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ மற்றும் ‘பி.டி. சார்’ போன்ற படங்களை இயக்கிய கார்த்திக் வேணுகோபால், தனது அடுத்த படத்திற்கான புதிய கதையை சமீபத்தில் சிவகார்த்திகேயனிடம் கூறியுள்ளார். அவரது இந்த கதை சிவகார்த்திகேயனுக்கு மிகவும் பிடித்துள்ளதாகவும், இதுகுறித்து தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், கார்த்திக் வேணுகோபால் இயக்கிய ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ திரைப்படத்தை, சிவகார்த்திகேயன் தனது எஸ்.கே புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. இதனால், இந்த கூட்டணி மீண்டும் இணைய வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
