மலையாள திரையுலகில் நடிகர் ஜெயசூர்யா நடிப்பில் உருவாகி வரும் புதிய திரைப்படம் ‘ஆபரேஷன் ட்ரால்’. ஜம்மு காஷ்மீரின் ட்ரால் பகுதியில் நடைபெற்ற உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் உருவாகி வருகிறது. இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர் ஜானரில் தயாராகும் இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று கொச்சியில் பிரம்மாண்ட பூஜையுடன் தொடங்கப்பட்டது. இந்த படத்தின் மூலம் பிரபல இசையமைப்பாளர் ரதீஷ் வேகா இயக்குநராக அறிமுகமாகிறார்.
இந்த திரைப்படத்தில் கதாநாயகிகளாக நடிகைகள் ரித்திகா சிங் மற்றும் அமைரா தஸ்தூர் இணைந்துள்ளனர். இதன் மூலம் இருவரும் மலையாள சினிமாவில் புதிய பயணத்தை தொடங்கியுள்ளனர்.
‘இறுதிச்சுற்று’ திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்ற ரித்திகா சிங், இதற்கு முன்பு துல்கர் சல்மான் நடித்த ‘கிங் ஆப் கொத்த’ திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடியிருந்தார். மேலும், 2024ஆம் ஆண்டு வெளியான ‘வேட்டையன்’ திரைப்படத்திற்குப் பிறகு அவர் நடித்துவரும் முக்கியமான படம் இதுவாகும். அதேபோல், ‘அனேகன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடம் பிரபலமான அமைரா தஸ்தூரும் இந்த படத்தின் மூலம் மலையாள சினிமாவில் அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
