மோகன்லால் நடிப்பிலும் இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கத்திலும் கடந்த 2013ஆம் ஆண்டு வெளியான ‘திரிஷ்யம்’ திரைப்படமும், அதன் தொடர்ச்சியாக 2021ஆம் ஆண்டு வெளியான ‘திரிஷ்யம் 2’ திரைப்படமும் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றன. இந்த இரண்டு படங்களின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது ‘திரிஷ்யம் 3’ திரைப்படம் வரும் மே 21ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த நிலையில், சமீபத்திய பேட்டியில் இயக்குநர் ஜீத்து ஜோசப், ‘திரிஷ்யம்’ கதையின் உருவாக்கம் குறித்து சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துள்ளார்.
அவர் கூறுகையில், “சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு என் சொந்த ஊரில் இரண்டு குடும்பங்களுக்கு இடையே நிலத் தகராறு ஏற்பட்டது. அந்தச் சம்பவத்தின் போது ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மற்றொரு குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரை தற்செயலாக தாக்கியிருந்தார்கள். அந்த நிகழ்வை நேரில் பார்த்தபோது, ஒருவேளை அந்த நபர் உயிரிழந்திருந்தால், சாதாரண குடும்பம் ஒன்று தங்களை காப்பாற்றிக்கொள்ள என்ன செய்திருக்கும், அந்த உண்மையை மறைக்க அவர்கள் எந்த எல்லை வரை சென்றிருப்பார்கள் என்ற எண்ணம் எனக்குள் தோன்றியது. அதுவே ‘திரிஷ்யம்’ கதையின் ஆரம்பக் கருத்தாக மாறியது” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், “இந்த யோசனை பல ஆண்டுகளாக என் மனதில் இருந்தது. பின்னர் 2011ஆம் ஆண்டு, ஒரு நடுத்தர குடும்பம் எதிர்பாராத விதமாக ஒரு கொலைச் சம்பவத்தில் சிக்கிக்கொண்டால், அதிலிருந்து அவர்கள் எப்படி தப்பிக்க முயற்சிப்பார்கள் என்பதை மையமாக வைத்து கதையை எழுத ஆரம்பித்தேன். அதன் பிறகு காவல்துறையின் தீவிர விசாரணையிலிருந்து தனது குடும்பத்தை ஒரு சாதாரண மனிதர் எவ்வாறு காப்பாற்றுகிறார் என்பதை மையமாக வைத்து கதையை விரிவுபடுத்தினேன்” என்று ஜீத்து ஜோசப் தெரிவித்துள்ளார்.
