நடிகர் ஷாருக்கான் நான்கு நாய்களை வளர்த்து வந்துள்ளார். அவற்றில் ஒரு நாயை ஷாருக்கானின் மனைவி கவுரி கானின் தந்தை சீனாவில் இருந்து கொண்டு வந்து பரிசாக வழங்கியிருந்தார். அந்த நாயின் மீது ஷாருக்கான் மிகவும் அதிக பாசம் வைத்திருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், ஒரு நாள் அந்த நாய் உடல்நலக்குறைவால் உயிரிழந்துவிட்டது. அப்போது ஷாருக்கான் வெளியூரில் படப்பிடிப்பில் இருந்ததாக கூறப்படுகிறது. பின்னர் அவர் வீட்டிற்கு திரும்பி வந்தபோது, நாய் இறந்த செய்தியை குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அந்த செய்தியை கேட்டதும் ஷாருக்கான் மிகவும் மனவேதனை அடைந்துள்ளார். அன்றிரவு அவரால் தூங்கவே முடியவில்லை என்றும் கூறப்படுகிறது.
இதையடுத்து நள்ளிரவு 2 மணியளவில் வீட்டுப் பணியாளர்களை அழைத்துக்கொண்டு, நாய் புதைக்கப்பட்டிருந்த கடற்கரைக்கு ஷாருக்கான் சென்றுள்ளார். அங்கு புதைக்கப்பட்டிருந்த நாயை மீண்டும் தோண்டி எடுத்து வந்து, தனது வீட்டு தோட்டத்தில் மீண்டும் அடக்கம் செய்துள்ளார். மேலும் அந்த நாய்க்காக சிறிய கல்லறையும் அமைத்துள்ளார். மறுநாள் அந்த கல்லறையை பார்த்து ஷாருக்கான் கண்கலங்கியதாக கூறப்படுகிறது. “என் நாயை எப்படி அங்கிருந்து தூக்கி எறிய முடியும்? அது உயிருடன் இருந்தாலும், இறந்தாலும் எங்களுடன்தான் இருக்க வேண்டும்” என்று அவர் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது இந்த சம்பவத்தை நினைவுகூர்ந்துள்ள கவுரி கான், ஷாருக்கான் மற்றும் அந்த நாய் இணைந்து இருக்கும் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். மேலும், “11 ஆண்டுகள் கடந்தும் அந்த வலி இன்னும் மறையவில்லை” என்று உணர்ச்சிபூர்வமாக பதிவிட்டுள்ளார்.
