சரண்ராஜ் செந்தில்குமார் என்ற புதுமுக இயக்குநர் எழுதி, இயக்கி, தயாரித்திருக்கும் திரைப்படம் ‘மண்டவெட்டி’. நாட்டுப்புறக் கதைகள் மற்றும் மனித உணர்வுகளை இணைக்கும் வகையில் உருவாகியுள்ள இந்த படம், சூப்பர் நேச்சுரல் கிரைம் திரில்லர் கதைக்களத்தில் அமைந்துள்ளது. இப்படத்தில் நடிகை கோமலி பிரசாத் கதாநாயகியாக நடித்துள்ளார். ‘செஞ்சி’ எனப்படும் சக்திவாய்ந்த உள்ளூர் தெய்வத்தை மையமாகக் கொண்டு மர்மம் நிறைந்த புராணக் கதையுடன் இந்த படம் உருவாகி வருகிறது.
தற்போது ‘மண்டவெட்டி’ திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த படம் குறித்து இயக்குநர் சரண்ராஜ் செந்தில்குமார் பேசியபோது, “இந்த திரைப்படத்தின் கதாநாயகி கதாபாத்திரத்திற்கு ஆழமான உணர்வுகளை மிகத் துல்லியமாகவும், எந்த தயக்கமுமின்றி வெளிப்படுத்தக்கூடிய ஒருவர் தேவை என்பதை ஆரம்பத்திலேயே உணர்ந்தேன். அந்த கதாபாத்திரத்தில் கோமலி பிரசாத் நடித்தது மட்டுமல்லாமல், அந்த வாழ்க்கையையே வாழ்ந்தார் என்று சொல்லலாம்” என தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், “மிகுந்த சோர்வை ஏற்படுத்தும் காட்சிகள், மனதை உலுக்கும் தருணங்கள் மற்றும் உடல் ரீதியாக கடினமான சூழ்நிலைகள் இருந்தபோதிலும், கோமலி முழுமையான அர்ப்பணிப்புடன் நடித்தார். இந்தக் கதை, தன்னைவிட பலமிக்க சக்தியுடன் போராடும் ஒரு பெண்ணின் வாழ்க்கையையும், அவள் அனுபவிக்கும் தாங்க முடியாத வலியையும், மனக்குழப்பங்களையும் மையமாகக் கொண்டது. பலவீனம், கோபம், வலி மற்றும் மீண்டு வரும் மனவலிமை ஆகிய அனைத்தையும் கோமலி தனது நடிப்பின் மூலம் அற்புதமாக வெளிப்படுத்தியுள்ளார்” என்றார்.
அதனைத் தொடர்ந்து, “இந்த படம் சூப்பர் நேச்சுரல் அம்சங்களை மையமாகக் கொண்டிருந்தாலும், அதற்குள் ஆழமான மனித உணர்வுகளும் இருக்கின்றன. பழமைவாத சிந்தனைகளுக்குள் சிக்கியிருக்கும் ஒரு பெண், தன்னுடைய உண்மையான அடையாளத்தை மீண்டும் தேடி செல்லும் பயணமே இந்தக் கதையின் மையம். அந்த கதாபாத்திரத்திற்கு கோமலி பிரசாத் அளித்த அற்புதமான நடிப்பை பார்த்து முழு படக்குழுவும் வியப்பில் ஆழ்ந்தது” என்று இயக்குநர் பாராட்டியுள்ளார்.
