நாகர்கோவிலில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் நடிகர் ரஜினிகாந்தின் மகளும் இயக்குநருமான சவுந்தர்யா ரஜினிகாந்த் கலந்து கொண்டு தனது குடும்பத்தினர் சார்பில் பல நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அந்த நிகழ்ச்சியில் கால்களை இழந்த மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால்கள் வழங்கப்பட்டதுடன், பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் ஆட்டோக்களும் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில் கலந்து கொண்ட பொதுமக்கள் மற்றும் பயனாளர்கள் சவுந்தர்யா ரஜினிகாந்தின் இந்த முயற்சியை பாராட்டினர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய சவுந்தர்யா ரஜினிகாந்த், “எங்களது குடும்பம் எப்போதுமே மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடு தான் இருந்து வருகிறது. என் தந்தை ரஜினிகாந்த் அவர்கள் நீண்ட காலமாக பல நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். அந்த வழியில்தான் நானும் தற்போது இந்த முயற்சியை தொடங்கியுள்ளேன். என்னுடைய நலத்திட்ட உதவிகளை கன்னியாகுமரியில் இருந்து தொடங்குவது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இது ஒரு ஆரம்ப முயற்சி மட்டுமே. இனி தொடர்ந்து தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் இதுபோன்ற நலத்திட்ட உதவிகளை வழங்க முயற்சி எடுப்போம்.
மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் நாங்கள் வந்துள்ளோம். அதற்கு அரசியலில் இருக்க வேண்டியது அவசியமில்லை. எந்த வழியிலிருந்தும் மக்களுக்கு உதவி செய்ய முடியும். மக்களுக்கு எது தேவையாக இருக்கிறதோ அதை செய்ய வேண்டும் என்பதே எங்களது நோக்கம். தமிழகத்தின் முதல்-அமைச்சராக பொறுப்பேற்றுள்ள விஜய் நல்லது செய்வார் என்ற நம்பிக்கையோடு மக்கள் அவருக்கு வாக்களித்துள்ளனர். அவரிடம் மக்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்பை வைத்துள்ளனர். எங்கள் குடும்பத்தின் சார்பில் அவருக்கு மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவிக்கிறோம். அவர் ஏற்கனவே பல சவால்களை எதிர்கொண்டு வந்துள்ளார். இனியும் பல சவால்கள் வரும். அவற்றையெல்லாம் வெற்றிகரமாக சமாளித்து சாதிப்பார் என்று நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
