தற்போது, மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் ‘மொத ராத்திரி’ படத்தில் அனிஷ்மா கதாநாயகியாக நடித்து வருகிறார். ‘குட் பேட் அக்லி’, ‘டியூட்’ ஆகிய படங்களை தொடர்ந்து, மைத்ரி நிறுவனம் தயாரிக்கும் மூன்றாவது தமிழ் திரைப்படம் இதுவாகும். ராஜா கருப்பசாமி இயக்கியுள்ள இப்படத்தில் ரிஷிகாந்த் மற்றும் அனிஷ்மா அனில்குமார் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இயக்குநர் ராஜா கருப்பசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “’மொத ராத்திரி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்திருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் நிறைவையும் அளிக்கிறது. எனது கதையின் மீது முழு நம்பிக்கை வைத்து, ஒவ்வொரு கட்டத்திலும் ஊக்கமளித்து, முழுமையான படைப்புச் சுதந்திரத்தை வழங்கிய தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர் ஆகியோருக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நடிகர்கள் ரிஷிகாந்த், அனிஷ்மா அனில்குமார், படத்தில் நடித்த அனைத்து நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் அயராது உழைத்த ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. மிக விரைவில் இந்த திரைப்படத்தை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்க ஆவலுடன் காத்திருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர் இணைந்து கூறியதாவது, “ஒரு திரைப்படத்தை திட்டமிட்ட காலக்கெடுவுக்குள் முழுமையாக நிறைவு செய்வது என்பது ஒட்டுமொத்த படக்குழுவின் அர்ப்பணிப்பு, ஒழுக்கம் மற்றும் ஒருங்கிணைந்த உழைப்பின் விளைவாகும். இயக்குநராக ராஜா கருப்பசாமிக்கு இது முதல் திரைப்படமாக இருந்தபோதிலும், அனுபவம் வாய்ந்த இயக்குநருக்குரிய முதிர்ச்சியுடனும் தன்னம்பிக்கையுடனும் படப்பிடிப்பை திட்டமிட்ட காலத்திற்குள் வெற்றிகரமாக முடித்து வழங்கியுள்ளார். திரைக்கதையின் மீது அவர் கொண்டிருந்த அர்ப்பணிப்பு, கடின உழைப்பு மற்றும் இடையறாத கவனம் பாராட்டத்தக்கது” என்று தெரிவித்தனர்.
தற்போது திரைப்படத்தின் பின்னணிப் பணிகள் முழு வேகத்தில் நடைபெற்று வரும் நிலையில், அடுத்த கட்ட அறிவிப்புகளுக்கான பணிகளும் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ‘மொத ராத்திரி’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா, டிரெய்லர் வெளியீடு மற்றும் உலகளாவிய திரையரங்கு வெளியீட்டு தேதி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் மிக விரைவில் வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.
