இயக்குனர் விக்ரமன், தனது மகனுடன் சென்னை தலைமைச் செயலகத்திற்கு சென்று தமிழக முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய விக்ரமன், விஜய்யின் எளிமை மற்றும் அன்பான அணுகுமுறை குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
அவர் கூறுகையில், “முதல்வர் என்ற எந்த பந்தாவும் விஜய்யிடம் கொஞ்சம் கூட இல்லை. 32 ஆண்டுகளுக்கு முன்பு என்னிடம் எப்படி பழகினாரோ, அதே அன்பும் நட்பும் இன்றும் அவரிடம் இருக்கிறது. ‘நான் எப்போதும் உங்கள் விஜய்தான். உங்களுக்கு எது வேண்டுமானாலும் தயங்காமல் சொல்லுங்கள்’ என்று அவர் கூறியபோது மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், திரைப்படத் துறையுடன் தொடர்புடைய சில முக்கிய கோரிக்கைகளையும் அவர் முதல்வரிடம் முன்வைத்ததாக கூறினார். “தனிப்பட்ட எந்த கோரிக்கையையும் நான் வைக்கவில்லை. திரைப்படத் துறைக்காகவே சில விஷயங்களை கேட்டுள்ளேன். பெப்சி தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட இடங்களில் வீடுகள் கட்ட முடியாத சூழல் உள்ளது. எனவே அரசே வீடுகள் கட்டித் தர வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளேன். அதேபோல் உதவி இயக்குனர்களுக்கு 50 ஏக்கர் நிலம் வழங்க வேண்டும் என்றும் கேட்டுள்ளேன். சிறிய படங்களுக்கு மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் உரிய வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். நிச்சயமாக விஜய் இதை செய்து கொடுப்பார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது” என்று விக்ரமன் தெரிவித்தார்.இயக்குனர் விக்ரமன் இயக்கத்தில் வெளியான ‘பூவே உனக்காக’ திரைப்படம் நடிகர் விஜய்யின் திரைப்பயணத்தில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.
