தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகராக தனக்கென தனி இடத்தை பிடித்து வருபவர் ஆக்சன் கிங் அர்ஜுன். தற்போது அவர், அறிமுக இயக்குனர் சுபாஷ் கே ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பிளாஸ்ட்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இயக்குனர் சுபாஷ் கே ராஜ், நடிகரும் இயக்குனருமான பிரதீப் ரங்கநாதனின் உதவி இயக்குனராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த திரைப்படத்தில் நடிகைகள் அபிராமி மற்றும் பிரீத்தி முகுந்தன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், பிரதீப் ரங்கநாதன் நடித்த ‘டிராகன்’ திரைப்படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனம் இந்த படத்தையும் தயாரித்துள்ளது. அப்பா மற்றும் மகள் உறவை மையமாகக் கொண்டு இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளதாக திரையுலகில் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இப்படத்திற்கு ‘கே.ஜி.எப்’ திரைப்படத்தின் மூலம் பிரபலமான இசையமைப்பாளர் ரவி பசூர் இசையமைத்துள்ளார்.
‘பிளாஸ்ட்’ திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என்று ஏற்கனவே படக்குழு அறிவித்திருந்தது. இந்த நிலையில், தற்போது இப்படத்திற்கு தணிக்கை வாரியம் ‘யு/ஏ’ தணிக்கைச் சான்றிதழ் வழங்கியுள்ளது. இதன் மூலம் படத்தின் வெளியீட்டு பணிகள் மேலும் தீவிரமாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
