நடிகை சமந்தா ரூத் பிரபு கடைசியாக கடந்த ஆண்டு வெளியான ‘சுபம்’ திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். அந்த திரைப்படம், அவரது தயாரிப்பில் வெளியான முதல் படமாகும். இதனைத் தொடர்ந்து, அவர் தயாரிப்பதாக அறிவிக்கப்பட்ட முதல் திரைப்படமான ‘மா இன்டி பங்காரம்’ தற்போது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த திரைப்படத்தை இயக்குனர் பி.வி. நந்தினி ரெட்டி இயக்கியுள்ளார். ஏற்கனவே ‘ஓ பேபி’ திரைப்படத்தின் மூலம் வெற்றி கூட்டணியாக அமைந்த சமந்தா – நந்தினி ரெட்டி இணை, மீண்டும் இந்த திரைப்படத்தின் மூலம் ஒன்றிணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், இப்படத்தில் கவுதமி, மஞ்சுஷா மற்றும் திகந்த் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
1980-களின் பின்னணியில் குடும்ப உணர்வுகளும் அதிரடி அம்சங்களும் கலந்த கதையாக உருவாகியுள்ள இப்படத்தில், சமந்தா அமைதியான மருமகளாகவும், அதே நேரத்தில் சவால்களை தைரியமாக எதிர்கொள்ளும் உறுதியான பெண்ணாகவும் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
முதலில் இந்த திரைப்படம் வரும் மே 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது படத்தின் வெளியீட்டு தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி, நடிகை சமந்தா தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘மா இன்டி பங்காரம்’ திரைப்படம் வரும் ஜூன் 19-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என்று தெரிவித்துள்ளார்.
