நடிகர் சூர்யா நடித்துள்ள ‘கருப்பு’ திரைப்படத்திற்கு தமிழக அரசு சிறப்பு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, இந்த திரைப்படத்தை மே 14 மற்றும் மே 15 ஆகிய வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் கூடுதலாக ஒரு காட்சி திரையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. படம் வெளியாகும் நிலையில் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவி வரும் சூழலில், இந்த அறிவிப்பு திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் ரசிகர்களிடையே கவனத்தை பெற்றுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “திரைப்படத்தை தயாரித்துள்ள ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனத்தின் கோரிக்கையை ஏற்று, மே 14 மற்றும் மே 15 ஆகிய இரு நாட்களில் கூடுதலாக ஒரு காட்சியை இயக்க அனுமதி வழங்கப்படுகிறது. திரையரங்குகளில் கூட்ட நெரிசல் ஏற்படாத வகையில் சுகாதார மற்றும் பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி காட்சிகளை திரையிட வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கருப்பு’ திரைப்படத்தில் சூர்யாவுடன் நடிகை திரிஷா கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த திரைப்படத்திற்கு வழங்கப்பட்டுள்ள இந்த சிறப்பு அனுமதி, தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற பிறகு வழங்கப்படும் முதல் கூடுதல் காட்சி அனுமதி என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அனுமதியின் மூலம் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்களுக்கு கூடுதல் வருமானம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. மேலும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வழக்கம்போல் ஐந்து காட்சிகள் இயக்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் விஜய் மற்றும் சூர்யா இருவரும் ‘பிரண்ட்ஸ்’ மற்றும் ‘நேருக்கு நேர்’ உள்ளிட்ட திரைப்படங்களில் இணைந்து நடித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
