புஷ்கர் மற்றும் காயத்ரி தயாரிப்பில், ‘மஞ்சப்பை’, ‘வாகை சூடவா’ போன்ற படங்களை இயக்கிய சற்குணம் இயக்கத்தில் உருவாகி வரும் வெப்சீரிஸ் ‘எக்ஸாம்’. அரசு தேர்வுகளை மையமாகக் கொண்டு நடைபெறும் ஊழல்கள் மற்றும் அதனால் மாணவர்கள் எதிர்கொள்ளும் பாதிப்புகளை மையமாகக் கொண்டு இந்த தொடர் உருவாக்கப்பட்டுள்ளது. மொத்தம் 7 பகுதிகளாக அமைந்துள்ள இந்த கதையில் துஷாரா விஜயன், அதிதி பாலன், அப்பாஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த வெப்சீரிஸ் மே 15ஆம் தேதி வெளியாக உள்ளது. இதில் போலீஸ் அதிகாரியாக வரும் அதிதி பாலனை கடத்திவிட்டு, துஷாரா அவரைப் போல நடிப்பதாகக் கதை நகரும் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தொடரைப் பற்றி பேசிய துஷாரா விஜயன், “இந்தக் கதையில் நான் கண்களை மூடியே நடிக்க ஒப்புக்கொண்டேன். அதற்குக் காரணம் புஷ்கர், காயத்ரி, மற்றும் சற்குணம். நான் ஒரே மாதிரியான சீரியஸ் கதாபாத்திரங்களில் மட்டுமே நடிக்கிறேன் என்று சிலர் கூறுகிறார்கள். அது இருக்கட்டும். என்னை கதைகள்தான் தேர்வு செய்கின்றன. என் குடும்பத்தில் எந்த அழுத்தமும் இல்லை; நான் ஆறு மாதங்கள் வேலை இல்லாமல் இருந்தாலும் கூட அவர்கள் எதையும் கேட்க மாட்டார்கள். இந்த படப்பிடிப்பின் போது அதிதி பாலனுடன் சண்டைக் காட்சிகளில் சிறப்பாக நடித்துள்ளேன். சில சமயங்களில் உண்மையாகவே அடிகள் பட்டன,” என்று பகிர்ந்துள்ளார்.
மேலும், விரைவில் ‘சார்பட்டா பரம்பரை 2’ படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாகவும், அதிலும் துஷாராவுக்கு அதிகமான காட்சிகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது. ‘ராயன்’, ‘வீரதீரசூரன்’, ‘அநீதி’, ‘வேட்டையன்’, ‘கழுவேத்தி மூர்க்கன்’, ‘நட்சத்திரம் நகர்கிறது’, ‘சார்பட்டா பரம்பரை’ போன்ற படங்களில் தொடர்ந்து சீரியஸ் கதாபாத்திரங்களில் நடித்துவரும் துஷாரா, முற்றிலும் மாறுபட்ட, நவீன மற்றும் வண்ணமயமான கதாபாத்திரங்களில் நடிக்க விருப்பம் கொண்டுள்ளார். தனது ‘ஹோம்லி’ தோற்றத்தை மாற்றவே இந்த வெப்சீரிஸில் நடித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
—
